பெரியபாளையம் அருகே சோகம் இடி தாக்கி பெண் பரிதாப பலி: 6 பேர் படுகாயம்

சென்னை: பெரியபாளையம் அருகே இடி, மின்னல் தாக்கியதில் நடவு வேலைக்குச் சென்ற பெண் பரிதாபமாக பலியானார். இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். பெரியபாளையம் அருகே வெள்ளியூர் அடுத்த பேரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லையப்பன். இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த அன்னபூரணி (45), முருகன் (31), உஷா (36), கலா (38), அற்புதம் (34), நாகம்மாள் (36),  சின்னபொண்ணு (45) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் நிலத்தில் நடவு நடும் பணியை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் நடவு செய்து கொண்டிருந்த நேரமான பிற்பகல் 2 மணி  வரை வெயில் வாட்டி எடுத்தது. பின்னர் 3 மணியளவில் திடீரென வானத்தில் மேக மூட்டம் ஏற்பட்டு  இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திறந்த  வெளியில் நிலத்தில் நடவு நடும் பணியில் இருந்த பெண்கள் மீது எதிர்பாராத விதமாக இடி மின்னல் தாக்கியது. இதில் நடவு பணியில் இருந்த அன்னபூரணி உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அன்னபூரணி உயிரிழந்துவிட்டார் என டாக்டர்கள்  தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த முருகன், உஷா ஆகியோரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் கலா, அற்புதம், நாகம்மாள், சின்னபொண்ணு ஆகிய 4 பேருக்கு திருவள்ளூர் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: