சென்னை: பெரியபாளையம் அருகே இடி, மின்னல் தாக்கியதில் நடவு வேலைக்குச் சென்ற பெண் பரிதாபமாக பலியானார். இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். பெரியபாளையம் அருகே வெள்ளியூர் அடுத்த பேரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லையப்பன். இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த அன்னபூரணி (45), முருகன் (31), உஷா (36), கலா (38), அற்புதம் (34), நாகம்மாள் (36), சின்னபொண்ணு (45) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் நிலத்தில் நடவு நடும் பணியை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் நடவு செய்து கொண்டிருந்த நேரமான பிற்பகல் 2 மணி வரை வெயில் வாட்டி எடுத்தது. பின்னர் 3 மணியளவில் திடீரென வானத்தில் மேக மூட்டம் ஏற்பட்டு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திறந்த வெளியில் நிலத்தில் நடவு நடும் பணியில் இருந்த பெண்கள் மீது எதிர்பாராத விதமாக இடி மின்னல் தாக்கியது. இதில் நடவு பணியில் இருந்த அன்னபூரணி உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.