சென்னை: விருகம்பாக்கம் அருகே வீடு புகுந்து ஆடு திருடியவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். விருகம்பாக்கம் பெரிய கிராமம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயா (45). இவர், வீட்டில் 10க்கும் மேற்பட்ட ஆட்களை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை 3 மணிக்கு இவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. உடனே, விஜயாவின் மகன் சரண் எழுந்து பார்த்த போது, ஆடுகளை மூன்று பேர் திருடுவது தெரிந்தது.
உடனே, திருடன்.. திருடன்.. என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் வசிப்போர் ஓடிவந்து 3 பேரையும் துரத்தினர். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்ற 2 பேர் தப்பினர். பிடிபட்டவரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவலறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், பொதுமக்களிடம் இருந்து ஆசாமியை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், நெற்குன்றத்தை சேர்ந்த நாகூர் மீரான் (51) என்றும், தனது நண்பர்களுடன் சேர்ந்து விருகம்பாக்கம் பகுதியில் தொடர்ச்சியாக ஆடுகளை திருடி பிரியாணி கடைக்காரர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.