நாகர்கோவில்: இறக்குமதியை அதிகரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதால் ரப்பர் விலை கிலோ ₹100க்கு கீழ் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் 4 கிரேடு ரப்பர் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி அதிகபட்ச விலையாக ₹153.50 என்ற அளவில் விலை உயர்ந்தது. பின்னர் சரிய தொடங்கியது. ஜூலையில் கிலோ ₹148 ஆகவும், ஆகஸ்டில் ₹145ஆகவும் குறைந்தது. செப்டம்பர் மாதத்தில் ₹130 ஆக குறைந்தது. நேற்று முன் தினம் கோட்டயம், கொச்சி மார்க்கெட்களில் ஆர்எஸ்எஸ்-4 கிரேடு ரப்பர் விலை ₹126 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆர்எஸ்எஸ் 5 கிரேடு விலை ₹123 ஆகும். ரப்பர் இறக்குமதியை அதிகரிக்க கம்பெனிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதால் ரப்பர் விலை சரிவை சந்தித்துள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர். இது வரும் நாட்களில் ஒரு கிலோ ரப்பர் ₹ 100க்கு கீழ் சரிய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியாவில் 6 லட்சம் டன் ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரப்பர் விலை மேம்பாடு அடைய தொடங்கிய நிலையில் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து அதிக அளவில் ரப்பர் வாங்கி இருப்பு வைக்க தொடங்கினர். அதிகபட்சமாக ₹ 145 வரை விலை கொடுத்து ரப்பர் வாங்கி இருப்பு வைத்தவர்கள் தற்போது படிப்படியாக கடும் விலை சரிவை எதிர்நோக்கி வருவதால் திகைப்பு அடைந்துள்ளனர்.