ரயில்வே பாதுகாப்பு படையில் 10,537 புதிய காவலர் நியமனம்: 50 சதவீதம் பேர் பெண்கள்

மும்பை: ரயில்வே பாதுகாப்பு படையில் 10,537 வீரர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள். இந்திய ரயில்வேயில் 1120 சப்-இன்ஸ்பெக்டர்கள், 8,619 கான்ஸ்டபிள்கள், 798 துணை ஊழியர்கள் உள்ளிட்டோரை தேர்வு செய்யும் பணியானது கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. இந்த பணிகள் சமீபத்தில்தான் நிறைவடைந்தது.இது குறித்து மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தலைவர் அதுல் பதக் கூறியதாவது:

தற்போது ரயில்வே பாதுகாப்பு படையில் 2.25 சதவீதம் மட்டும்தான் பெண் காவலர்கள் இருக்கின்றனர்.  பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை உறுதி செய்யும் வகையில் காலி பணியிடங்களை நிரப்புவதில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு படைக்கான வீரர்கள் தேர்வுக்காக 82 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. 1120 சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிடத்துக்காக 14.25 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். காவலர் பணியிடத்துக்கு 59 லட்சம் விண்ணப்பங்களும், துணை ஊழியர் பணிக்கு 9 லட்சம் விண்ணப்பங்களும் வந்திருந்தன. 1,120 சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிடத்துக்கு 819 ஆண்கள் மற்றும் 301 பெண்கள் தேர்வு ெசய்யப்பட்டுள்ளனர். 8,619 காவலர் பணியிடங்களுக்கு 4,403 ஆண்கள், 4,216 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வுகள் முடிந்து காவல் துறை மூலம் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. முதல் முறையாக கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையிலும், குறுக்கீடுகளை தடுக்கும் வகையிலும் ஆட்சேர்ப்பு பணிக்கான அனைத்து நடைமுறைகளும் கணினிமயமாக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: