×

விமானப் படை தாக்குதல் நடத்திய இடத்தில் தீவிரவாதிகள் மீண்டும் பயிற்சி: வெளியான புகைப்படங்களில் அதிர்ச்சி

காஷ்மீர்: இந்திய விமானப்படையால் தாக்கப்பட்ட பாலகோட் தீவிரவாதிகள் முகாமில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முகாம் மீது 1,000 கிலோ  வெடிகுண்டுகளை இந்திய விமானப்படை வீசி தாக்கியது.

இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விமானப்படையால் தாக்கப்பட்ட பாலகோட் முகாமில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த 40 தீவிரவாதிகளுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், மன்ஷெரா, குல்புர், கோட்லி ஆகிய பகுதிகளிலும் ஜிகாதி பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடந்த இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதற்காக இந்தியாவுக்குள் நுழைய பூஞ்ச், ரஜோரி எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் தயாராக காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : militants ,air force attack , Air Force attack, terrorists, re-training
× RELATED மணிப்பூரில் கூடுதல் எஸ்.பி....