வீட்டில் தூங்கிய பெண் மானபங்கம் தொழிலாளி அடித்துக்கொலை

கோபி:  ஈரோடு  மாவட்டம் அவ்வையார்பாளையத்தை சேர்ந்தவர்  விஜயகுமார் (39). இவர் ரிக் வண்டி தொழிலாளியாக வேலை செய்துவந்தார்.  இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று விஜயகுமார், அதே பகுதியில்  உள்ள பஸ் ஸ்டாப்  நிழற்குடையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த  கோபி போலீசார் விசாரித்ததில், அவ்வையார்பாளையத்தை சேர்ந்த திருமணமான 45 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில்   தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிற்குள் சென்ற விஜயகுமார், அவரிடம்  தகாத முறையில் நடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்  சத்தமிட்டுள்ளார். வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த அவரது கணவர் மற்றும்  உறவினர்கள் உள்ளே வந்தனர். அதற்குள் விஜயகுமார் தப்பியோடி உள்ளார். ஆத்திரமடைந்த உறவினர்கள் விடிய,  விடிய விஜயகுமாரை தேடி உள்ளனர்.  நேற்று அதிகாலை அவ்வையார்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே  விஜயகுமார் வரும்போது பெண்ணின் உறவினர்கள் மடக்கி அடித்து உதைத்து உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பலியானார். அந்த பெண்ணின் உறவினர்கள், விஜயகுமாரின் உடலை பஸ்  நிறுத்த நிழற்குடைக்குள் போட்டு, வாயில் பூச்சி மருந்தை ஊற்றி, தற்கொலை  செய்து கொண்டதுபோல் செட்டப்  செய்துவிட்டு தப்பியுள்ளனர் என்று தெரியவந்தது. இதையடுத்து கோபி  போலீசார், பெண்ணின் உறவினர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: