கோவில்பட்டி: தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனையை நடைமுறைப்படுத்த துறை ரீதியாக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்திலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு முத்து மாவட்டம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்தும், என்னென்ன திட்டங்கள் உள்ளது எனவும் மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பு தமிழகத்தில் ஆன்லைன் சினிமா டிக்கெட் விற்பனையை நடைமுறைப்படுத்த முடியுமா என துறை ரீதியாக பரிசீலித்து வருகிறோம். அடுத்த வாரம் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை அழைத்து உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.