×

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பாஜகவுக்கு கேட்க டெல்லி மேலிடம் முடிவு?: அதிமுகவினர் அதிர்ச்சி

சென்னை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜ போட்டியிட டெல்லி மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது. இதற்கான ேவட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டியில் திமுக  போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.அதிமுக தரப்பில் 2 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இன்று விருப்ப மனுக்கள் வாங்கப்படுகிறது. இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட டெல்லி தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இடைத் தேர்தலில்  ஆளும் கட்சியின் ஆதரவோடு வெற்றி பெற வேண்டும் என்று பாஜ நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால், தொகுதியை கேட்டு பாஜ அதிமுக தலைமையை அணுகி வருவதாக தகவல் ெவளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜ சார்பில் மக்களவை உறுப்பினர் ஒருவர் கூட இல்லை. அதே போல எம்எல்ஏக்களும் இல்லை. இதை காரணம் காட்டி இந்த தொகுதியில் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு வழங்க ேவண்டும் என்று பாஜ மேலிடம் அதிமுகவை  வலியுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த 2016ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜ நாங்குநேரியில் 6,609 வாக்குகள் வரை பெற்றது. தற்போது நாங்குநேரியில் பாஜகவுக்கு செல்வாக்கு  அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட இரு சமூகத்தை சேர்ந்த மக்களின் வாக்கு பாஜகவுக்கு கிடைக்கும். எனவே, அந்த தொகுதியில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை பாஜ சார்பில் நிறுத்த முடிவு செய்துள்ளோம். எனவே,  எப்படியாவது அந்த தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை அனைத்து மாநில பாஜக நிர்வாகிகளுடன் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பாஜ தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா பேசினார். அப்போது தமிழகத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது நிர்வாகிகள் நாங்குநேரி தொகுதியில் பாஜக போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இந்த முறை மக்களவையிலோ, சட்டப்பேரவையிலோ ஒரு உறுப்பினர் கூட கிடையாது.  இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு ஒருவரையாவது அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு செல்வாக்கு உருவாகும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும்  அமித்ஷாவும் நடைபெற உள்ள 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் பாஜக கட்டாயம் ேபாட்டியிட வேண்டும் என்றும் அவர் விரும்பி வருகிறார். நாங்குநேரி தொகுதியில் தேசிய கட்சியான காங்கிரஸ் தான்  போட்டியிடுகிறது. இன்னொரு தேசிய கட்சியான பாஜக போட்டியிட்டால் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் தமிழகத்தில்  மக்கள் செல்வாக்கு எந்த அளவில் உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று அமித்ஷா கருதுவதாக கூறப்படுகிறது.  இதனால், எப்படியாவது நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக பிடிவாதமாக உள்ளது. அந்த தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோரில்  ஒருவரை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுகவில் 2 தொகுதியிலும் அதிமுக தான் போட்டியிட வேண்டும் என்று அதிமுக தலைமை கருதுகிறது. பாஜகவுக்கு மக்கள் ெசல்வாக்கு என்பது அறவே கிடையாது. பாஜகவை கூட்டணியில் சேர்த்ததால் தான்  அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்தோம். அதன் பிறகு மத்திய பாஜக அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையால் தான் வேலூர் மக்களவை தொகுதியிலும் அதிமுக தோல்வியை சந்திக்க நேரிட்டது.  எனவே, எக்காரணம் கொண்டும் அதிமுக போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்க கூடாது. தொகுதியை விட்டு கொடுக்க கூடாது என்று அதிமுகவில் சில தலைவர்கள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர். கடைசியில் யார் போட்டியிட  போகிறார்கள் என்பதற்கு இன்னும் ஓரிரு நாளில் விடை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.



Tags : Delhi MLA ,BJP ,election ,NCP , Fourth Nomination ,by-election,ask BJP?
× RELATED அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்!