×

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினர் இன்றும், நாளையும் விருப்ப மனு அளிக்கலாம்

* நாளை மாலை 3.30க்கு நேர்காணல்
* இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினர் இன்றும், நாளையும் விருப்ப மனு அளிக்கலாம் என்றும், நாளை மாலை 3.30 மணிக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என்றும்  இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நேற்று காலை அறிவித்தார்.
இதையடுத்து, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று நேற்று மதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிற அதிமுகவினர், சென்னையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் இன்றும் (22ம் தேதி), நாளையும் (23ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் விண்ணப்ப கட்டண தொகையாக ₹25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து நாளை பிற்பகல்  3 மணிக்குள் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.மற்றொரு அறிக்கையில், இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள அதிமுகவினரிடம் நாளை (23ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும். விருப்ப மனு அளித்துள்ள அதிமுகவினர் அனைவரும் தவறாமல் கலந்து  கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.



Tags : Vikramaditya ,party ,by-election ,Vikravandi ,Nanguneri , Vikravandi ,Nanguneri, by-election, today ,tomorrow
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...