மும்பை: புறநகர் ரயிலில் ஏற்பட்ட தகராறின் போது சக பயணியின் விரலை கடித்து துப்பியவர் கைது செய்யப்பட்டார். நவி மும்பையில் உள்ள கன்சோலியை சேர்ந்தவர் மகேஷ் பாண்டூரங். இவர் தாதரில் இருந்து அசன்காவ் செல்லும் புறநகர் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் ஏறினார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. மகேஷ் ரயில் வாசல் அருகில் நின்று கொண்டிருந்தார். குர்லா ஸ்டேஷனில் ஆசிப் யூசுப் ஷேக் என்பவர் ஏறினார். ஆசிப் கூட்டத்தை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றார். இதனால் ஆசிப்புக்கும் மகேஷூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
அப்போது கடும் கோபமடைந்த ஆசிப், மகேஷின் கைவிரலை பலமாக கடித்தார். அவரது இரண்டு பற்களுக்கு இடையே மகேஷின் கை விரல் சிக்கிக்கொண்டது. விரலின் ஒரு பகுதி ஆசிப் வாயிக்குள் சிக்கிகொண்டது. ஆசிப் வாய் முழுக்க ரத்தமாக இருந்தது. இதனால் சக பயணிகள் ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தானே ஸ்டேஷனில் ரயில் நின்ற போது அங்கு வந்து காத்திருந்த ரயில்வே போலீசார் ஆசிப்பை கைது செய்தனர். துண்டான கைவிரலை ஒன்று சேர்க்க மகேஷூக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.