மும்பை: மத்திய அரசின் சலுகைகள் அறிவிப்பால் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சற்று அதிகமாகத்தான் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “பொருளாதார மந்த நிலையில் இருந்து வளர்ச்சி பாதைக்கு திருப்ப மத்திய அரசு பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது வரி குறைப்பு, நிதி ஒதுக்கீடு செய்து ஊக்கம் அளித்தல் போன்ற நடவடிக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிறுவனங்களுக்கான வரியை குறைத்து அறிவித்துள்ளார். இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். இவற்றால் அரசுக்கு வரும் வருவாயில் சுமார் ரூ.1.45 லட்சம் கோடி குறையும். இதுபோன்ற நடவடிக்கைகளால் ல் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். இதனால், நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் இருந்ததைவிட செப்டம்பர் மாதத்துடன் முடிந்த 2வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்” என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.