×

அதிகரிக்கும் நீரின்றி வறண்ட போர்வெல்கள் எண்ணிக்கை திறந்தவெளி கிணறுகள் மூலம் நிலத்தடி நீராதாரம் காக்க வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

வேலூர்: அடுத்தடுத்த போர்வெல்களால் நிலத்தடி நீராதாரம் படுபாதாளத்துக்கு போவதை தடுக்க முன்பு போல திறந்தவெளி கிணறுகளை அமைத்து மழைநீரை வீணாகாமல் தடுத்து நிலத்தடி நீராதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நமது நாட்டை பொறுத்தவரை விவசாயம் என்பது ஊருணிகள், கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஆற்றுக்கால்வாய்கள் மற்றும் பாசன கிணறுகள் மூலமே நடந்து வந்தது. சுயநலத்துடன் நவீனத்தின் பக்கம் காலடித்தடம் பதிந்த நாள் முதல் இயற்கையை அழிக்கும் பணியும் தொடர்ந்து வருகிறது. விளைவு, மழைநீரை நம்பி ஓடிக் கொண்டிருந்த ஆற்றுப்படுகைகள் பாலைவனங்களாக மாறத்தொடங்கியது மட்டுமின்றி, மணல் கொள்ளையர்களின் சூதாட்டக்களமாகவும் ஆயின. அதேவழியில் ஏரிகளும், குளங்களும் கூட மனிதனின் சுயநல போக்கால் காணாமல் போயின. வீடுகளின் புழக்கடைகளில் இடம்பெற்றிருந்த கிணறுகளும், வீதிகளின் மத்தியில் இடம்பெற்றிருந்த திறந்தவெளி குடிநீர் கிணறுகளும் படிப்படியாக தூர்ந்து சாலையாக மாறின. அதேபோல் நகரங்களை ஒட்டிய கிராமப்புற விவசாய கிணறுகளும் வீட்டுமனைகளாக முகம் மாற்றிக் கொண்டன. இருக்கும் திறந்தவெளி கிணறுகளும் வறண்டு காணப்படுகின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய திறந்தவெளி கிணறுகளே இப்போதும் பயன்தந்து வருகின்றன.

இத்தகைய காலக்கட்டத்தில்தான் ஆழ்துளை கிணறுகள் என்ற போர்வெல்களின் பக்கம் மக்களின் கவனம் மட்டுமின்றி அரசின் கவனமும் திரும்பியது. நினைத்த இடங்களில் நினைக்கும் நேரத்தில் பூமியை துளையிடும் பணி மட்டும் இப்போது வரை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் பாக்கெட்டுகளை குறிப்பிட்ட சதவீதம் நிரப்பும் பணியை போர்வெல் போடுதல், சீரமைப்பு பணி என்ற ரீதியில் போர்வெல் அமைக்கும் திட்டம் செய்து வருகிறது. திறந்தவெளி கிணறுகள் அமைப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் மலையடிவாரங்களில் 700 முதல் 1700 அடி வரை சென்று விட்டது. ஆற்றுப்படுகைகளை ஒட்டி 350 முதல் 750 அடிவரை உள்ளது. கடற்கரையோரங்களில் 180 முதல் 450 அடி வரை உள்ளது. நகரங்களில் 750 முதல் 1200 அடிக்கும் கீழே நிலத்தடி நீர் மட்டம் சென்று விட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான போர்வெல்கள் போடப்படுகின்றன. இவ்வாறு போடப்படும் போர்வெல்களில் 70 சதவீதம் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வறண்டு போகும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான போர்வெல்கள் உள்ளன. இவை அனைத்தும் 100 சதவீதம் நீர்வளத்துடன் உள்ளதா என்பது கேள்விக்குறி.
இதற்காகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் பல வட்டாரங்கள் கருப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 20 ஒன்றியங்களுமே கருப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் போர்வெல்கள் போடப்படுவது தொடர்ந்தே வருகிறது.

இந்த நிலையில்தான் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் நிலைப்பாடு வறண்டு கிடக்கும் போர்வெல்களை ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும் என்ற முடிவை நோக்கி உள்ளாட்சி அமைப்புகளை தள்ளியிருக்கிறது. பல ஊராட்சி ஒன்றியங்களில் வறண்ட போர்வெல்களை சுற்றி மழைநீர் உறிஞ்சுகுழிகள் ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் விவசாய திறந்தவெளி கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் திட்டம் 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக வழங்கப்படும் மானியமான ₹1,499.27 கோடியுடன் இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ₹1,798.71 கோடி.நிலத்தடி நீர் அளவிற்கு மிஞ்சி பயன்படுத்தப்பட்ட, நீர்மட்டம் இக்கட்டான அல்லது நெருக்கடியான நிலைக்கு சென்றுள்ள  ஆந்திரபிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகம், ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத் மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 1,180 வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்த்துதல், நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்துதல், பற்றாக்குறை காலங்களிலும் நீர் இருப்பை தக்க வைப்பது மற்றும் ஒட்டுமொத்த வேளாண் விளைச்சலை அதிகப்படுத்துதல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கங்களாகும். இத்திட்டத்தின் மூலம் 4.45 மில்லியன் கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுள் 2.72 மில்லியன் கிணறுகள் சிறுகுறு விவசாயிகளுக்குச் சொந்தமானவை. மற்றவை பிற விவசாயிகளுக்குச் சொந்தமானவை. ஒரு கிணற்றில் நீர்சேமிப்பு அமைப்பு அமைக்க சராசரியாக ₹4,000 செலவாகிறது. தங்கள் சொந்த நிலத்தில் கிணறு வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். இதற்காக சிறுகுறு விவசாயிகளுக்கு 100% மானியமும் பிற விவசாயிகளுக்கு 50% மானியமும் அளிக்கப்படவுள்ளது.

அதேநேரத்தில் புதிதாக போர்வெல்கள் அமைப்பதை விட ஒரே செலவினமாக நீராதாரம் உள்ள இடங்களில் திறந்தவெளி கிணறுகளை அமைப்பதை ஊக்குவிப்பதுடன், பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட திறந்தவெளி பாசன கிணறுகள், குடிநீர் கிணறுகளை மறுசெறிவூட்டி பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். இதற்காக ஏற்கனவே உள்ள விவசாயம் மற்றும் குடிநீர் கிணறுகளின் அருகில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : borewells ,wells ,naturalists , Increasing number,dry borewells,increase groundwater, open wells,Naturalists insist
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்