வந்தாச்சு மாருதி ஜிம்னி

மாருதி நிறுவனத்தின் வெற்றிகரமான ஆப்ரோடு மினி எஸ்யூவி ரக மாடலாக வலம் வந்தது ஜிப்ஸி. தனி நபர் மார்க்கெட்டைவிட, இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் அதிகம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், மிக நீண்ட காலமாக இந்தியாவில் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கும் ஜிப்ஸி விற்பனை கடந்த மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டது. இதற்கு மாற்று மாடலை மாருதி சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஜிம்னி எஸ்யூவி ரக மாடலை, ஜிப்ஸிக்கு பதிலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அடக்கமான வகை ஆப்ரோடு எஸ்யூவி ரக மாடலாக ஜிம்னி பட்ஜெட் விலையில் வர உள்ளது. இது, இந்திய ஆப்ரோடு பிரியர்களின் ஆவலை கிளறியுள்ளது. இந்நிலையில், மாருதி சுஸுகி நிறுவன இன்ஜினீயரிங் பிரிவு தலைவர் சி.வி.ராமன் அளித்துள்ள பேட்டி: ஜிம்னி, வெளிநாடுகளில் 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களில் விற்பனையாகிறது.

இதில், 5 டோர் மாடல்தான் இந்தியாவுக்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால், இந்த 5 டோர் மாடலை இந்தியாவுக்காக மாற்றங்களை செய்வதற்காக அதிக முதலீடுகளை செய்ய வேண்டி இருக்கும். ஆனால், அதற்கு தக்கவாறு இந்தியாவில் ஜிம்னிக்கு வரவேற்பு இருக்குமா என்பது சந்தேகம்தான். எனவே, ஜிம்னி உடனடியாக களமிறக்கும் திட்டம் இல்லை எனக்கூறியுள்ளார்.  இந்தியாவில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. எனவே, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான இன்ஜின் தேர்வுகளில் ஜிம்னி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா தார், போர்ஸ் குர்கா எஸ்யூவி ரக மாடல்களுக்கு சிறந்த மாற்றாகவும், அதே பட்ஜெட்டிலும் இப்புதிய ஜிம்னி வெளிவரும் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாருதி ஜிம்னி இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. விலை விவரமும் அறிவிக்கப்படவில்லை.

Related Stories: