ஐதராபாத்: கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்தும்படி வலியுறுத்தி தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசையுடன் தமிழக விவசாயிகள் சந்தித்து பேசினர். தமிழகத்தில் நிலவும் தண்ணீரை தட்டுப்பாட்டை நீக்க கோதாவரி-காவிரி நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் கர்நாடகம், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் பயனடையும். இந்த இணைப்பு நடந்து விட்டால் காவிரி டெல்டாவில் தண்ணீர் பிரச்னை தீர்ந்து விடும் என மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், கோதாவரி நீர்ப்பாசன திட்டங்களை பார்வையிட தமிழகம், கர்நாடகம், கேரளம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300 விவசாயிகளை தெலங்கானா மாநில நீர்ப்பாசனத்துறை அந்த மாநிலத்துக்கு அழைத்து உள்ளது. தமிழகத்தின் சார்பில் தமாகா விவசாய அணி தலைவர் திருச்சி புலியூர் நாகராஜன் மற்றும் மதுரை குருசாமி, திருவாரூர் சத்யநாராயணன், ஈரோடு நல்லசாமி உள்பட 30 பேர் சென்று உள்ளனர். இவர்களுடன் 3 பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சென்று உள்ளனர்.