அறந்தாங்கி பகுதியில் ஓட்டை உடைசலான அரசு பஸ்கள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படுமா?

*பயணிகள் எதிர்பார்ப்பு

அறந்தாங்கி : அறந்தாங்கி பகுதியில் ஓட்டை உடைசலாக ஓடிக்கொண்டிருக்கும் அரசு நகர பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் அறந்தாங்கி பணிமனையில் இருந்து 28 நகர பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கிராமப்பகுதிகளை அதிகம் கொண்ட அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் நகர பேருந்துகளில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் இந்த பேருந்துகளில் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரும் சென்று வருகின்றனர். கிராமப்புற மக்களின் முக்கிய போக்குவரத்து வசதியாக நகர பேருந்து வசதி விளங்கி வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்களில் பெரும்பாலும் நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளை மட்டுமே இது இயக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆனபின்பு புதிய பேருந்துகளாக மாற்றுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஓட்டை உடைசலாக இயங்கி வந்த நகர பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளாக இயக்க உத்தரவிட்டார்.

அதன்படி அறந்தாங்கி பணிமனையில் இருந்து மட்டும் 2,3,4,7,8,10,11,14, 16,20,21 உள்ளிட்ட தடம் எண்களை கொண்ட நகர பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. பழைய நகர பேருந்துகள் அடிக்கடி பழுதாகி இடையில் நின்றதால், வருவாய் இழப்பை சந்தித்த போக்குவரத்து கழகம், நகர பேருந்து வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இயக்கியதால், பேருந்துகள் இடைப்பட்ட பகுதிகளில் நிற்காமல், தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் இயங்கியதால், போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அறந்தாங்கி பணிமனையில் நகரப்பேருந்துகளாக இயக்கப்பட்ட புதிய பேருந்துகள் அனைத்தும் சுமார் 10 ஆண்டுகளை கடந்து விட்டதால், அந்த பேருந்துகளின் கூரைகள் பெயர்ந்தும், பாடிகள் சேதமடைந்தும் உள்ளன.

இதனால் மழைக்காலங்களில் பேருந்துகளின் உள்ளே தண்ணீர் ஒழுகுகிறது. என்ஜின் பழுதடைவதால், பேருந்துகள் அடிக்கடி பாதி வழியில் நின்று விடுகின்றன. மேலும் என்ஜின் சப்தம் அதிகமாகி உள்ளதால், பேருந்துக்குள் டிரைவர், கண்டக்டர், பயணிகளின் காதுகள் பாதிப்படையும் நிலை உள்ளது. மேலும் பேருந்தின் இயந்திரங்கள், பிரேக்குகள் போன்ற உதிரி பாகங்கள் சேதமாகி உள்ளதால், டிரைவர்கள் பேருந்துகளை இயக்கவே சிரமப்படுகின்றனர்.

எனவே கிராமப்புற மக்கள் மற்றும் மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, அறந்தாங்கி பணிமனையில் இருந்து ஓட்டை உடைசலாக ஓடிக்கொண்டிருக்கும் நகர பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: