கண்ணாடி மாளிகை முன் கொய் மலர்களால் அலங்கார வளைவு

ஊட்டி :ஊட்டி தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மற்றும் பெர்னஸ் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொய்மலர்களால் ஆன செல்பி ஸ்பாட் (அலங்கார வளைவு) மலர் அலங்காரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

சுற்றுலா தலமான ஊட்டிக்கு இரண்டாவது சீசனின்போது பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளை படையெடுப்பார்கள், இவர்களை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்களை மேற்கொண்டுள்ளது.

இம்முறை 2.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்கா தற்போது மலர்களால் ஜொலிக்கிறது. அதேபோல், 15 ஆயிரம் தொட்டிகளில் தயார் செய்யப்பட்ட மலர் செடிகள் மாடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெர்னஸ் பூங்காவில் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும் வகையில் பிரமாண்ட மலர் அலங்காரமும், பூந்தொட்டிகளால் ஆன மலர் கோபுரம் அமைத்துள்ளது. இது தவிர கண்ணாடி மாளிகை  முன் இம்முறை புதிதாக ஒரு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி மாளிகை நுழைவு வாயிலை அலங்கரிக்கும் வகையில் கொய் மலர்களை கொண்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதபோல், பூங்காவிலும் ஒரு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

மலர் அலங்காரங்களை பார்க்க அனுமதி

தாவரவியல் பூங்காவில் பள்ளி காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை விடுமுறை என தொடர் விடுமுறை வரும் நிலையில், ஊட்டியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட வாய்ப்புள்ளது. இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை அருகில் சென்று காண நேற்று முதல் அனுமதியளிக்கப்பட்டது. மேலும், பராமரிப்பு பணி காரணமாக சிறிய புல் மைதானம் மட்டும் மூடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் மலர் அலங்காரங்களையும், செடிகளில் பூத்து குலுங்கும் வண்ண வண்ண மலர்களையும் கண்டு ரசிக்கலாம்.

Related Stories: