விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள்..: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

புதுடெல்லி: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவத்துள்ளார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனார். இதனால், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானது. இதேபோல, விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த ஜுன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால், இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல், ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் நவம்பர் 2 மற்றும் 9 தேதிகளில் முடிவடையவுள்ளது. எனவே, இந்த தேதிகளுக்கு முன்னால், ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, இத்தொகுதிகளுக்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு

ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்

288 சட்டமன்ற தொகுதிகள் உள்ள, மகாராஷ்டிரா மற்றும், 90 தொகுதிகள் உள்ள ஹரியானாவில் ஒரே நாளில தேர்தல் நடத்தப்படும். அதாவது அக்டோபர் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். செப்டம்பர் 27ம் தேதியன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, அக்டோபர் 4ம் தேதியன்று முடிவடையும். அக்டோபர் 24ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மேலும், மகாராஷ்டிரா, ஹரியானாவில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் விரிவான ஆய்வுகளை செய்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் நடத்துவது தொடர்பாக இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1.82 கோடி. மகாராஷ்டிராவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8.94 கோடி ஆகும்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செப் 23ம் தேதி தொடங்கி செப்.30ம் முடிவடையும். அக்டோபர் 1ம் தேதியன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்.3ம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதியன்று நடைபெறும். இதேபோல், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலும் அக்டோபர் 21ம் தேதியன்று தேர்தல் நடைபெறும். இத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 23ம் தேதி ஆரம்பமாகிறது. வாக்கு எண்ணிக்கை 24ம் தேதியன்று நடைபெறும்.

கர்நாடக இடைத்தேர்தல்

கர்நாடக மாநிலத்தில் உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 15 தொகுதிகளில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 12 தொகுதிகளும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.  

மேலும் பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின் போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். திங்கட்கிழமை முதல் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி தொடங்குகிறது. பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories: