தேனி: தேனி அரசு மருத்துவ கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரனிடம் கண்டமனுர் விளக்கு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித்சூர்யா என்ற மாணவர் மீது, மோசடி, சதித்திட்டம் தீட்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை நடத்தியதால், உதித்சூர்யா தனக்கு இங்கு படிக்க விருப்பம் இல்லை என்று கூறி தேனி மருத்துவக்கல்லூரியில் இருந்து வெளியேறி சென்றார். அதன்பிறகு அவர் கல்லூரிக்கு வரவில்லை. மேலும், அவரது வீட்டிலும் யாரும் இல்லை. இந்த நிலையில், உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, முன்ஜாமின் கோரி மாணவர் உதித் சூர்யா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் தேனி மருத்துவக்கல்லூரியில் தனக்கு இடம் ஒதுக்கப்பட்டது.