சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. 18-ம் தேதி பெய்த கனமழையில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 22 செ.மீ. மழை பதிவாகியது. திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னை அருகே இருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.