சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது : வலுவான ஆதாரங்கள் சிக்கியதால் அதிரடி

ஷாஜகான்பூர்: சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவை சிறப்பு விசாரணை குழு போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.  உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சின்மயானந்தா (73) மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர், அந்த மாணவி மாயமானார். அவர் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சின்மயானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிறப்பு விசாரணை குழுவை உத்தரப் பிரதேச அரசு நியமித்தது. இந்நிலையில், சின்மயானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஒரு ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் அந்தமாணவி  சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். இதனை தொடர்ந்து மாணவி தங்கி இருந்த விடுதி அறையில் சிறப்பு விசாரணை குழுவினர் சோதனை நடத்தி, அந்த அறைக்கு சீல் வைத்தனர். இதேபோல், முமுக்சூ ஆசிரமத்தில் உள்ள சின்மயானந்தாவின் படுக்கை அறையில் சிறப்பு விசாரணை குழு ஆய்வு செய்தது. பிறகு, அந்த அறைக்கும் சீல் வைக்கப்பட்டது.

இதனிடையே, சிறப்பு விசாரணை குழு ேபாலீசார் நேற்று சின்மயானந்தாவை திடீரென கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள திவ்யதம் வீட்டில் இருந்த அவரை, போலீசார் ைது செய்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். பின்னர், அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பொதுமக்கள், நோயாளிகள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு, நீதிமன்றத்தில் சின்மயானந்தா  ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை லக்னோ சிறையில் போலீசார் அடைத்தனர். மாணவியின் விடுதி அறையிலும், சின்மயானந்தாவின் வீட்டு படுக்கை அறையிலும் நடத்தப்பட்ட தடயவியல் சோதனைகளில், பலாத்காரம் நடந்ததற்கான வலுவான ஆதாரங்கள் சிக்கியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

‘என் செயலுக்காக வருந்துகிறேன்’

சின்மயானந்தாவின் வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவின் தலைவராக நவீன் அரோரா உள்ளார். அவர் கூறுகையில், ‘‘பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு கூறியுள்ள மாணவி சின்மயானந்தாவுக்கு மசாஜ் செய்து விடும் வீடியோ காட்சிகள் எங்களிடம் உள்ளது. அது, சின்மயானந்தாவிடம் ஆதாரமாக காட்டப்பட்டது. அதை பார்த்த அவர், ‘உங்களுக்கு எல்லாம் தெரிந்து விட்ட பிறகு, நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனது குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். எனது இந்த செயலுக்காக வருந்துகிறேன்’ என்று தெரிவித்தார்,’’ என்றார்.

மாணவி மிரட்டியதால்...

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாஜ அரசானது மிகவும் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளது. எனவேதான், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறும் வரை அது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சின்மயானந்தா கைதுக்கு மக்கள், பத்திரிகைகளின்  வலிமையே காரணமாகும். பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்பது முழக்கமாக மட்டும் இருக்கக் கூடாது. அது நடைமுறையிலும் கடைபிடிக்கப்படும் என்பதை மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: