பெங்களூருவில் நாளை 3வது டி20 இந்திய வீரர்கள் உற்சாகம்

பெங்களூரு: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று உற்சாகமாக பயிற்சி மேற்கொண்டனர். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. தர்மசாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்த முதல் டி20 போட்டி, கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

அடுத்து மொகாலியில் நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 150 ரன் இலக்கை துரத்திய இந்தியா, கேப்டன் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் விழ்த்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. கோஹ்லி ஆட்டமிழக்காமல் 72 ரன் (52 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் நாளை நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தனர். இந்திய அணி முன்னாள் கேப்டனும், இளைஞரணி பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்தார். இதனால் இந்திய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராத் கோஹ்லியும் அவரை வரவேற்று தங்கள் கருத்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

Related Stories: