மருமகன் வாங்கிய 1 லட்சம் கடனை வசூலிக்க இறந்தவர் சடலத்தை 2 நாள் அடக்கம் செய்ய விடாமல் தடுத்த உறவினர்கள்

திருமலை: ஆந்திராவில் மருமகன் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்த மாமனார் இறந்தபின் அவரது சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம்,  புங்கனூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மாமனார் வெங்கட்ரமணா. சிவக்குமார் தனது உறவினர்களிடம் குடும்ப செலவிற்காக ₹1 லட்சம் கடன் வாங்கினாராம். அப்போது இவரது மாமனார் பணத்திற்கு உத்தரவாதம் அளித்தாராம்.   இந்நிலையில், கடந்த 17ம் தேதி வெங்கட்ரமணா உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். தனது மாமனாரின் இறுதி சடங்கை நடத்த சிவக்குமார் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கடன் கொடுத்த உறவினர்கள், வாங்கிய 1 லட்சத்தை கொடுத்தால் தான் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என கூறி தகராறு செய்தனர். இதனால் சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், அவரது உறவினர்கள் யாராவது கடனை திருப்பிக் கொடுக்காமல் இறந்து விட்டால் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கக் கூடாது என்று பழைய செருப்பில் எழுதி அதை புளியமரத்தில் கட்டி வைப்பது வழக்கமாம்.அதுபோல் வெங்கட்ரமணா கடன் கொடுக்காமல் இறந்துவிட்டார் என்பதை செருப்பில் எழுதி புளியமரத்தில் கட்டி வைத்தனர்.

மேலும், பணத்தை கொடுத்தால்தான் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம் எனக்கூறியும், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வந்தவர்களையும் மிரட்டினராம். சிவக்குமாரின் மாமியாரும், அவரது உறவினர்களும் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் மனம் இரங்கவில்லை. இதனால் இறந்து 2 நாளாகியும் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த புங்கனூர் போலீசார் நேற்றுமுன்தினம் மாலை சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சிவகுமாருக்கு கடன் கொடுத்தவர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் சடலத்தை அடக்கம் செய்ய கடன் கொடுத்த உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதன்பின்னர் வெங்கட் ரமணாவின் சடலத்தை அன்றிரவு அடக்கம் செய்தனர்.

Related Stories: