தலைமை நீதிபதி இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா? உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலாய உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. இந்த இட மாற்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இந்நிலையில், தலைமை நீதிபதியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் நிர்வாக உத்தரவுதான். இந்த உத்தரவை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி வக்கீல் கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்ய  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரபாகர், 2010ம் ஆண்டு  ஆளுநர் ஒருவர் மாற்றம் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொது முக்கியதுவம் வாய்ந்த விவகாரங்களில் தனி நபர்கள் வழக்கு தொடரலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சாசனம் 222 பிரிவில் நீதிபதிகளை இடம் மாற்றம் செய்வது குறித்து கூறப்பட்டுள்ளதே தவிர, தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்வது குறித்து கூறப்படவில்லை. நீதிபதிகள் நியமனம், பணி இடம் மாற்றம் குறித்து உச்ச நீதிமன்றத்தின்  அனைத்து நீதிபதிகளும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள தலைமை நீதிபதி தஹில் ரமானியை இடமாற்றம் செய்தது நியாயமற்றது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று வாதிட்டார்.

 அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்டதாக கருதும் நீதிபதிகள்தான் வழக்கு தொடர முடியும் என்றும், மற்றவர்கள் வழக்கு தொடர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றத்தால் திருத்தி அமைக்க முடியாது. தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் சமமானவர்கள் தான். நிர்வாக ரீதியில் மட்டுமே அவர் உயர் பதவியான தலைமை நீதிபதி பதவியை வகிக்கிறார். அந்த வகையில் பணியிடம் மாற்றம் செய்யலாம் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தனர்.  இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories: