தமிழகத்தில் லோக் ஆயுக்தா கலைக்கப்படுமா? 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் அடுத்த நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.  முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை 4 மாதத்தில் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி 11ம் தேதி உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.  தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டார்.

மேலும் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நீதித்துறையை சார்ந்திராத ஓய்வு ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் சங்க நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் ராஜாராம், ஆறுமுகம் ஆகிய 2 பேரும் விதிகளுக்கு புறம்பாக லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களின் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் நியமனத்திற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ராஜேந்திரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகத்தில் உள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இது மாநிலத்தில் ஊழல் செய்பவர்களை காப்பாற்றும் விதமாகத்தான் உள்ளது. மேலும் சட்டம் என்பது சக்தி இல்லாத ஒரு அமைப்பாகத் தான் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் விசாரிக்கப்படும் குற்ற வழக்கில் முகாந்திரம் உள்ளது என்று உறுதி செய்யப்பட்டால் மீண்டும் அதில் உள்ள உறுப்பினர்களே அந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும் அதிகாரம் கிடையாது. மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தான் மாற்றி அமைக்க வேண்டும். இதை தவிர வேறு வழியே கிடையாது. அதனால் பல்வேறு குளறுபடிகள் கொண்டுள்ள இந்த அமைப்பை முழுமையாக தமிழகத்தில் ரத்து செய்துவிட்டு புதிய சட்டத்தை ஏற்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் மனுவில் உள்ள அனைத்து சாராம்சம் மற்றும் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தாவால் உள்ள பாதிப்புகள் குறித்த அனைத்தையும் எடுத்துரைத்தார். இதையடுத்து நீதிபதிகள், “தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா அமைப்பை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அடுத்த நான்கு வாரத்தில் மாநில அரசு மற்றும் லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’’ என தெரிவித்து, வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: