சென்னை: பேனரால் ஏற்படும் உயிரிழப்புகள் அரசின் அலட்சியத்தால் நடக்கும் கொலைகள் என கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீடியோவில் பேசியிருப்பதாவது: உலகத்தில் மிக கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? வாழ வேண்டிய பிள்ளைகளின் மரணச் செய்தியை பெற்றவர்களிடம் சொல்வதுதான். சுபயின் மரணச் செய்தியும் அப்படிப்பட்டதுதான். தன் மகளின் ரத்தம் சாலையில் சிந்திக் கிடப்பதைப் பார்க்கும்போது, பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரின் மனதிலும் திகிலும் மரண வலியும் கண்டிப்பாக வரும். பெண்களை பெற்றவன் என்கிற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.
இந்த மாதிரி பல ரகுக்கள் (கோவையை சேர்ந்த ரகு, கடந்த 2018ம் ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த வளைவில் மோதியதில் உயிரிழந்தவர்), சுபஸ்ரீக்களும் அரசாங்கத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொஞ்சம் அறிவு வேண்டாமா, எங்கு பேனர் வைக்க வேண்டும், எங்கு வைக்கக் கூடாது என உங்களுக்கு தெரியாதா, இவர்களைப் போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ? எதிர்த்துக் கேள்விக் கேட்டால் ஏறி மிதிக்கின்றனர். தவறை கேள்வி கேட்டால் நாக்கை அறுப்பேன் என மிரட்டுவதுதானே இவர்களுக்கு தெரிந்த அரசியல். இம்மாதிரியான ஆட்களின் மீது எனக்கு நூலிழை அளவு கூட மரியாதையும் பயமும் கிடையாது.
ஒருவேளை உங்களுக்கு பயமிருந்தால் என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள். மக்கள் நீதி மய்யம் உங்கள் சார்பாக, தவறுகளை தட்டிக்கேட்டு தீர்வும் தேடித்தர முற்படும். எங்களை ஆள்பவர்களை நாங்கள்தான் தேர்வு செய்வோம். ஆனால், நாங்கள் காலம் முழுவதும் அடிமையாகத்தான் இருப்போம், என்று சொன்னால், அதைவிட மூடத்தனம் எதுவும் கிடையாது. உங்களை ‘சாதாரண மக்கள், சாதாரண மக்கள்’ என்று சொல்லிச் சொல்லியே அடிமையாகவே என்றும் வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள்தான் அசாதாரணமான தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் திண்ணமாக நம்புகிறேன். வாருங்கள், தவறுகளை தட்டிக் கேட்போம். புதிய தலைமையை உருவாக்குவோம். இவ்வாறு வீடியோவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
டிவிட்டரில் கமல் கூறும்போது, ‘தமிழகத்தில் அலட்சிய கொலைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்த வைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.