×

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டதை  ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு  பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 522 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட சங்க துணைப்பதிவாளர்  அம்மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அறிவித்தார்.  அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலத்தூர் பால்  உற்பத்தியாளர்கள் சங்கத்தை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வருவதாகவும் அதன் காரணமாக அவருக்கு இந்த பதவி வழங்கி இருப்பதாகவும்  குறிப்பிடப்பட்டிருந்தது.

 இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு தலைவர் பதவி கொடுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வனபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பச்சமுத்து, உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் நடத்தாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பதவியை கொடுத்திருப்பது  கூட்டுறவு சங்க விதிகளுக்கு எதிரானது. அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தலைவராக தேர்ந்தெடுக்க தகுதியாக கூறப்படும் இலத்தூர் பால் உற்பத்தியாளர் சங்கம் தற்போது வரை ஒரு லிட்டர் பாலை கூட ஆவின் நிறுவனத்திற்கு வழங்கவில்லை.  விதிகளின்படி 90 நாட்களில் 120 லிட்டர் பாலை கூட்டுறவுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வரும் சங்கம் நிறைவேற்றி இருப்பதற்கான ஆவணங்களும் இல்லை.

  எனவே, அக்ரி கிருஷ்ணமூர்த்தியை திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக ஆவின் இயக்குனர்,  திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : UDF ,Minister Agri ,Thiruvannamalai District Milk Producers' Association ,Krishnamurthy Thiruvannamalai ,Minister Agri Krishnamurthy ,District Milk Producers' Association , Agri Krishnamoorthy, Former Minister of the Milk Producers Association, Thiruvannamalai District, Government of Tamil Nadu, High Court
× RELATED கடமலை மயிலை ஒன்றியத்தில் திமுக உட்கட்சி தேர்தல் வேட்புமனு