சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேச்சுப்போட்டி-கட்டுரைப் போட்டி-கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் முதல்நிலைப் போட்டிகள் நடைபெறும். பேச்சுப் போட்டியில், ‘கல்விக்கொள்கை அன்றும்... இன்றும்’, ‘கலைஞர் கனவுகளின் செயல்வடிவம் தலைவர் ஸ்டாலின்’ இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடத்திற்கு மிகாமல் பேச வேண்டும். கட்டுரைப் போட்டிக்கு ‘அன்னைத் தமிழும்-அண்ணா...கலைஞரும்’, ‘பெரியார் என்றும் தேவை! ஏன்?’ ஆகிய இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 100 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
கவிதை ஒப்பித்தல் போட்டியில், 18-9-1978- முப்பெரும் விழா கவிதை! “நாற்பதாண்டுக் கால மொழிப்போரின் சிப்பாய்கள் நாம்” எனத் தொடங்கி “இதயத்தில் வாழ்தல் வேண்டும்” என முடியும் தலைவர் கலைஞர் கவிதை. 15-1-1995 அன்று பொங்கல் விழா கவியரங்கில் “கணக்கு” என்ற தலைப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பாடிய “ஞாயிறு போற்றுதும்; ஞாயிறு போற்றுதும்!” எனத் தொடங்கி “கொள்ளை இலாபக் கணக்கு!’’ என முடியும் தலைவர் கலைஞர் கவிதை ஆகிய இரண்டு கவிதைகளில் ஏதேனும் ஒரு கவிதையை ஒப்பித்தல் வேண்டும். மாவட்ட அளவில் நடைபெறும் முதல்நிலை போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.5,000, 3ம் பரிசு ரூ.2,500, ஆறுதல் பரிசு ரூ.1,000 வீதம் பத்து பேருக்கு வழங்கப்படும். உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 9, 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் மட்டுமே பங்கேற்க தகுதியுடையவராவர்.
பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகளில் ஏதேனும் ஒருபோட்டியில் மட்டுமே ஒருவர் பங்கு பெற வேண்டும். மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25,000, 2ம் பரிசாக ரூ.15,000, 3ம் பரிசாக ரூ.10,000, ஆறுதல் பரிசாக ரூ.5,000 வீதம் 10 பேருக்கு வழங்கப்படும். மாநில அளவிலான இறுதிகட்ட போட்டிகள் அக்டோபர் 19, 20 ஆகிய நாட்களில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் நகரத்தில் நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.