ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், தொடர் விடுமுறை மற்றும் கோடை விடுமுறையின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். அதேபோல், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். இதனால் ஊட்டி நகரமே சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டும். வாகன நெரிசல், போக்குவரத்து மாற்றம் என எப்போதும் பிசியாக இருக்கும். அதேபோல், இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்ேடாபர் மாதங்களில் தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறை, பூஜை விடுமுறை ஆகியவைகள் வரும்.
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை விடுமுறையும், கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறையும் வரும். இதனால், செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த 3 மாதங்களில் அதிகமாக வருவார்கள். இதனால், இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்களை செய்து வருகிறது. இம்முறை 2.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. தற்போது இந்த செடிகள் அனைத்தும் பூத்து குலுங்குகிறது.
அதேபோல், 15 ஆயிரம் தொட்டிகளில் தயார் செய்யப்பட்ட மலர்செடிகள் மாடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெர்னஸ் பூங்காவில் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும் வகையில் பிரமாண்ட மலர் அலங்காரமும், பூந்தொட்டிகளால் ஆன மலர்கோபுரம் அமைத்துள்ளது. இதுதவிர கண்ணாடி மாளிைக முன் இம்முறை புதிதாக ஒரு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி மாளிகை நுழைவு வாயிலை அலங்கரிக்கும் வகையில் கொய் மலர்களை கொண்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதபோல், பூங்காவிலும் ஒரு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.