வால்பாறை: வால்பாறையில் அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். கோவை மாவட்டம், வால்பாறை, சோலையார் அணை மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் அரசின் அனுமதியின்றி பல்வேறு தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், கட்டிடம் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்றது என தாசில்தார் ஆய்வுசெய்து அனுமதி வழங்க வேண்டும். இந்த நிலையில் வால்பாறை மாணிக்கா எஸ்டேட்டில் அரசின் அனுமதியின்றி செயல்பட்டுவந்த சொகுசு விடுதியில் நேற்று தாசில்தார் வெங்கடாசலம், டிஎஸ்பி. விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சோதனை செய்து, அந்த விடுதிக்கு சீல் வைத்தனர். தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.