டெல்லி: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின்னர் வாகனங்களுக்கு மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது. 11 மாநிலங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக பீகார் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிகளவிலான வாகனங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து டெல்லியின் நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியிடப்படாதபோதிலும், அங்கும் மாசுக்கட்டுப்பாட்டு தரசான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் வரும் காலங்களில் மேலும் உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.