மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின்னர் மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 9 மடங்கு உயர்வு

டெல்லி: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின்னர் வாகனங்களுக்கு மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது. 11 மாநிலங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக பீகார் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிகளவிலான வாகனங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து டெல்லியின் நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியிடப்படாதபோதிலும், அங்கும் மாசுக்கட்டுப்பாட்டு தரசான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் வரும் காலங்களில் மேலும் உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 5 மாநிலங்கள் மட்டுமே திருத்தப்பட்ட மோட்டார் வாகனசட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ள அபராதங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளன. இருப்பினும் ஓட்டுநர் உரிமம் மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் உள்ளிட்டவைகளை பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்மாதத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் 9 மடங்கு அளவுக்கு அதிகமானோர் மாசுக்கட்டுப்பாடு தரச்சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளனர். இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சட்டத்தை மதிக்க செய்வதற்காகவே அதிகளவிலான அபராதங்கள் விதிக்கப்படுவதாகவும், அரசாங்கத்துக்கு வருவாயை அதிகரிக்க செய்ய அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: