தேர்தல் தொடர்பான பிரச்சாரத்தின் காரணமாக 'ஹவ்டி மோடி'நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது: துள்சி கப்பார்ட் வருத்தம்

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையை வரவேற்றுள்ள துள்சி கப்பார்ட், அதே சமயம் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு தன்னால் வர இயலாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு  ஒரு வார பயணமாக நாளை செல்கிறார். இவரை வரவேற்பதற்காக, ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்கின்றனர். பிரதமர்  மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதற்கிடையே, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் இந்து உறுப்பினர் துள்சி கப்பார்ட், ஹூஸ்டனில் நடைபெறவுள்ள பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரைச்  சந்திக்கும் நிகழ்வுக்கு, ஏற்கெனவே திட்டமிட்ட தேர்தல் தொடர்பான பிரச்சாரத்தின் காரணமாக தன்னால் வர இயலாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியப் பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்பதாகவும்,  முடிந்தால் அவரை நேரில் சந்தித்து பேசவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய-பசிஃபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடு இந்தியா என்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பருவநிலை மாற்றம், அணு ஆயுதப் போர் தடுப்பு, அணு ஆயுதப் பெருக்கம்  மற்றும் பொருளாதாரத்தின் மூலம் மக்கள் வாழ்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகளில் இணைந்து பணியாற்றுவதைத் தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உலகமே ஒரே குடும்பம் எனப் பொருள்படும் வசுதைவ் குடும்பகம் ((vasudhaiv kutumbakam)) என்ற சொல்லாடலை சுட்டிக்காட்டி வெறுப்பு, அறியாமை, பாரபட்சத்துக்கு இடமளிக்காமல், வளர்ச்சி, வளம், வாய்ப்பு, சமத்துவம், அறிவியல்,  சுகாதாரம், சூழலியல், பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பில் கவனம் செலுத்தி இரு நாடுகளின் பலமான நீண்ட நட்பை மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Related Stories: