ராஜஸ்தான்: பிரதமர் மோடியின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் கருத்து தெரிவித்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற டாக் ஜெர்னலிசம் என்னும் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிதரூர், நாட்டின் பொருளாதாரம், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை குறித்து பேசினார். அப்போது கட்சியின் தலைவர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும், அது தொண்டர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கும் எனவும் சசிதரூர் கூறினார். ஆனால் தற்போது சோனியா காந்திக்கு இடைக்கால தலைவர் எனும் கவசத்தை காங்கிரஸ் காரிய கமிட்டியினர் வழங்கியிருப்பதாகவும் சசிதரூர் தெரிவித்தார். இதேபோல பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து முதலீடுகளை திரும்ப எடுத்து கொண்டிருப்பதாகவும், நாட்டில் நிலவும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் எனவும் கூறினார்.