உலக புகழ் பெற்ற பல்கலையோடு கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு நடத்த திட்டம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: சங்கை பயன்படுத்தி ஆபரணங்கள் தயார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கீழடியில் நடத்தப்பட்டு வரும் 5ம் கட்ட அகழாய்வு தொடர்பாக அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்த்த தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளது. இது தொடர்பாக, இந்த பகுதியில் நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் அனைத்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சங்குகளை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல வணிக ரீதியான பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று வரை இந்தியாவின் பலபகுதிகளில் கழிவுநீர் வடிகால்கள் சரிவர அமைக்கப்படவில்லை.

ஆனால் அந்த காலத்திலேயே, கழிவிடங்கள், கழிவு நீர் செல்லக்கூடிய பாதைகள் இவை அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. கீழடியில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பொக்கிஷங்கள் கிடைத்து வருகிறது என தெரிவித்தார். அதேபோல, தங்க நகை ஆபரணங்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கீழடியில் கிடைத்துள்ளன. இது சிந்து சமவெளியில் கிடைத்த அதே தமிழ் பிராமி எழுத்துக்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கீழடி அகழ்வாராய்ச்சியை மிக பெரிய முயற்சியாக தமிழக அரசு முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்தார். உலக தமிழகர்களை உணர்வுபூர்வமாக ஒருங்கிணைக்கக்கூடிய ஓர் இடமாக கீழடி திகழ்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் 6ம் கட்ட கீழடி அகழாய்வினை உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தோடு இணைந்து செயல்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மத்திய கலாசார அமைச்சரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த அகழாய்வினை ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவுள்ளதாக கூறினார். தற்போது, கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அகழ்வைப்பகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, 2015 -லிருந்து 2017ல் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தொடர்பான அறிக்கை எப்போது வெளியிடப்படும் என செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கீழடியில் 5 பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. அதனை முறையாக வெளியிட ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.

Related Stories: