×

அசுர வேகத்தில் விலை உயர்வு : பெட்ரோல் விலை 37 காசுகளும் டீசல் 30 காசுகளும் அதிகரிப்பு ; வாகன ஓட்டிகள் கலக்கம்

சென்னை : மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை கவலை அடைய வைத்துள்ளது. சென்னையில்  ஒரே நாளில் பெட்ரோல் விலை 37 காசுகளும் டீசல் 30 காசுகளும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. சர்வதேச சந்தையில் சமீப நாட்களாக கச்சா எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரிய மாற்றம் ஏற்படாமல் இருந்தது.

ஆனால், கடந்த 14ம் தேதி சவூதி அரபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 19.5 சதவீதம் அதிகரித்து, பேரல் 72 டாலரை நெருங்கியது. இது கடந்த 30 ஆண்டுகளில்  இல்லாத மிகப்பெரிய உயர்வாகும். உற்பத்தி மற்றும் சப்ளையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை இயல்பு நிலையை நோக்கி திரும்பி வருகிறது.

 இருப்பினும் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட திடீர் உயர்வை தொடர்ந்து, நேற்றும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளன. சென்னையில் நேற்று ரூ.75.56க்கு விற்கப்பட்ட பெட்ரோல், இன்று 37 காசுகள்  உயர்ந்து ரூ.75.93க்கு விற்பனை ஆகிறது. இதே போன்று ரூ. 69.77 காசுகளை விற்கப்பட்ட டீசல், 30 காசுகள் உயர்ந்து ரூ. 70.07க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவுதியில் கடந்த 14ம் தேதி தாக்குதல் நடைபெற்ற நிலையில், 6 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.1.15, டீசல் விலை ரூ. 0.98 உயர்ந்துள்ளன. கடந்த ஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலால் வரியை உயர்த்தியதால், பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு தலா 2.50 உயர்ந்தது. இதன் பிறகு ஒரே நாளில் 37 காசு வரை விலை  அதிகரித்துள்ளது.

Tags : motorists , Petrol, Diesel, Price, Crude Oil, Federal Budget, Nirmala Sitharaman
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...