×

சில்லி பாய்ன்ட்...

தெ.ஆப்ரிக்காவில் முத்துசாமி:
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா ஏ அணியில் உள்ள வீரர்களின் ஒருவர் செனுரன் முத்துசாமி(24). தெ.ஆப்ரிக்காவின் டர்பனில் பிறந்த தமிழர். உள்ளூர் போட்டிகளில் பேட்டிங், சுழற் பந்து வீச்சில் அசத்தி வந்த முத்துசாமி இப்போது  ஏ அணியில் இடம் பிடித்துள்ளார். பீல்டிங்கிலும் வல்லவர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி 3000 ரன்னுக்கு மேல் குவித்துள்ளார். அதில் அதிகபட்சம் 181 ரன். கூடவே 104 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா ஏ  முன்னிலை:
இந்தியா ஏ - தென் ஆப்ரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான அங்கீகாரமற்ற 2வது டெஸ்ட் போட்டி மைசூரில் நடக்கிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 417 ரன் எடுத்தது. அதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா 3வது நாளான நேற்று 400ரன் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன் எடுத்தது. பாஞ்சால் 9 ரன், ஈஸ்வரன் 5 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். இப்போது இந்தியா 31 ரன் முன்னிலையில் உள்ளது இன்று கடைசிநாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி சமனில் முடியவே வாய்ப்பு உள்ளது.

வேலூரில் சைக்கிள் பந்தயம்:
வேலூரில் முதல்முறையாக சாலை வழித்தட சைக்கிள் பந்தயம் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்ட சங்கம் நடத்தும் இந்தப் போட்டி செப்.22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும். காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் போட்டி தொடங்கும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த மாதம் திருப்பூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில்  பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் பதிவு செய்ய, கட்டணம் செலுத்த, விவரங்கள் அறிய 9751407204, 8124781621, 9994353584  என்ற எண்களை  தொடர்பு கொள்ளவும்.

கடைசி இடத்தில் தமிழ் தலைவாஸ்:
புரோ கபடி தொடரின் இந்த சீசனிலும் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளில் சிக்கித் தவிக்கிறது. இதுவரை விளையாடிய 17 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் சமன், 11 போட்டிகளில் தோற்று உள்ளது. அதிலும் கடந்த 11 போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. அதனால் தலைவாஸ் 30புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. தலைவாஸ் அணியில் தமிழக வீரர் அஜித்குமார் அசத்தலாக விளையாடினாலும், மற்றவர்கள் சொதப்புகிறார்கள். அதனால் தலைவாஸ் தகுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மிகக்குறைவு.

ஆர்சிபி கேப்டனை மாற்றும் திட்டமில்லை:
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக இருப்பவர் விராட் கோஹ்லி . ஆனால் ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்(ஆர்சிபி) அணியின் கேப்டனாக  அவர் இதுவரை சாதிக்கவில்லை. அது ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் விமர்சனங்களை எழுப்பி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய இயக்குநராக நியூசிலாந்தின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹஸ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வீராட் கோஹ்லி கேப்டனாக தொடர்வது குறித்து நேற்று பெங்களூரில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு மைக், ‘கோஹ்லியின் தலைமை குறித்து எந்த கேள்வியும் இல்லை. அதனால் அவரை மாற்றும் திட்டம் ஏதுமில்லை. 2020 ஐபிஎல் தொடருக்கான வீரர்களை  அணிக்கு  செய்வதற்குதான் இப்போது முக்கியத்துவம் அளிக்கிறோம்’ என்றார்.

Tags : South Africa , Mutusamy , South Africa
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...