புதுடெல்லி: பிஎப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டில் பிஎப் வட்டி 8.55 சதவீதமாக இருந்தது. 2018-19 நிதியாண்டுக்கான வட்டி நிர்ணயம் தொடர்பாக முடிவு செய்ய, பிஎப் அறக்கட்டளை குழு கூடியது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக உயர்த்தி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த பரிந்துரை மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் மேற்கண்ட வட்டி விகிதத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.