7 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை கடும் சரிவு 1.65 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு 1.65 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.  பொருளாதார மந்த நிலை காரணமாக பங்குச்சந்தையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை நேற்று கால் சதவீதம் குறைத்தது. இருப்பினும், இன்னும் எந்த அளவுக்கு வட்டி குறைக்கப்படும் என்பதில் ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது. இதனால் சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இதுதவிர, மத்திய அரசு வரி வருவாய் கடந்த ஆண்டை விட 17.5 சதவீதம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வரி வருவாய் அந்த அளவு உயர வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில், இது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் இன்று கூட உள்ளதால், இதில் வெளியாகும் அறிவிப்புக்கு ஏற்ப பங்கு வர்த்தகத்தை முதலீட்டாளர்கள் முடிவு செய்ய உள்ளனர்.  இதுபோன்ற காரணங்களால், மும்பை பங்குச்சந்தை நேற்று காலை முதலே சரிவுடன் காணப்பட்டது. மாலை வர்த்தக முடிவில் 470.41 புள்ளிகள் சரிந்து 36,093.47 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி, 135.85 புள்ளிகள் சரிந்து 10,704.80 ஆகவும் இருந்தது. இதனால் பங்குகள் மதிப்பு 1,40,19,877.3 கோடியில் இருந்து 1,65,437.91 கோடி சரிந்து 1,38,54,439.41 கோடியாக இருந்தது.

Related Stories: