சென்னை: சென்னை ஐஐடியின் இன்ஜினியரிங் டிசைன் துறை சார்பில் நாளை அடுத்த தலைமுறை இயந்திரங்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.சென்னை ஐஐடியில் கடந்த 5ம் தேதி ‘இன்ஸ்டியூட் ஆப் எமினென்ஸ்’ அந்தஸ்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வழங்கியது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை ஐஐடிக்கு ₹1,000 கோடி ஆராய்ச்சி பணிகளுக்காக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் முதல் 300 இடங்களுக்குள் இந்தியாவில் இருந்து எந்த கல்வி நிறுவனமும் இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த சிறப்பு அந்தஸ்து, நிதியுதவி மூலம் உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐஐடி உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.சென்னை ஐஐடியில் அடுத்த தலைமுறை இயந்திரங்களை வடிவமைப்பது, தொழில் துறையினர் முன் உள்ள சவால்களை எதிர்கொண்டு அதை போக்குவதற்கான ஆலோசனைகள் வழங்குவது, புதிய இயந்திரங்களை உருவாக்குவதற்கு 2006ம் ஆண்டு இன்ஜினியரிங் டிசைன் என்ற துறை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அடுத்த தலைமுறை இயந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள், ஐஐடியில் நாளை (செப்டம்பர் 21ம் தேதி) ஓபன் ஹவுஸ் நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இலவசமாக காணலாம்.