வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்காவிட்டால் தமிழக இளைஞர்களை திரட்டி போராட்டம்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்காவிட்டால், இளைஞர்களை திரட்டி  மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் வட மாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அந்தத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த  இளைஞர்கள் 10 பேர் கூட தேர்வாகவில்லை என்பது கடும் கண்டத்திற்குரியது.திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைக்கு தேர்வான 300 பேரில் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1765 பேரில் 1600 பேர் வட  மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் வடமாநிலத்தவர்களை அதிக அளவில் நியமனம் செய்து-தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அடியோடு புறக்கணிக்கும் விபரீத விளையாட்டை  மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது.

இங்குள்ள அதிமுக அரசோ, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வட மாநில இளைஞர்களை ‘இன்ஜினியர்களாக’ தேர்வு செய்கிறது. ஏன், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் நடைபெறும் தேர்வுகளை வட மாநிலத்தவர் எழுதலாம் என்று  கூறி- இப்போது 176 சிவில் நீதிபதிகள் பதவிக்கு நடைபெறப் போகும் தேர்விலும் வட மாநில இளைஞர்கள் தேர்வு எழுதலாம் என்று சூசகமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் இளைஞர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு  அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, இலவு காத்த கிளிகளைப் போல் காத்திருக்கும் இந்த நெருக்கடியான சூழலில், மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் போட்டிப் போட்டு கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களையெல்லாம் வட  மாநிலத்தவருக்கு வாரி வழங்கி-தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது.

தமிழகத்தில் உள்ள  மத்திய அரசு அலுவலகங்களின் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் இனிமேல், தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் வகையில் ‘போட்டித் தேர்வின் விதிமுறைகளை’ மத்திய அரசு  உடனடியாக திருத்த வேண்டும் என்றும்; தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற வகையில் தேர்வு விதிகளை உருவாக்கிட வேண்டும் என்றும், சிவில்  நீதிபதிகள் தேர்வில் முழுக்க முழுக்க தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.வேலையில்லாத் திண்டாட்டம் தமிழகத்தில் பெருகிக் கொண்டிருக்கின்ற நிலையில், மத்திய-மாநில அரசுகள் உரியத் திருத்தங்களைக் கொண்டு வந்து தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வராவிட்டால், இளைஞர்களை திரட்டி  மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற வகையில் தேர்வு விதிகளை உருவாக்கிட வேண்டும்.

Related Stories: