சேலம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டனர். இதனால், 100 கோடி மதிப்பில் சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை. மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், மோட்டார் வாகன திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்ததையடுத்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நேற்று நடத்தியது.