அண்ணாநகர்: கனமழை காரணமாக அண்ணாநகரில் தனியார் மருத்துவமனைக்கு அருகில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். சென்னையில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் இருந்த மின் இணைப்பு பெட்டி அதிகாலை 2 மணி அளவில் மண்ணில் சரிந்து விழுந்தது. இதனால், மின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தம் வந்தது. மின் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு பரவியதால் மருத்துவமனையில் இருந்த மின் வயர்களில் மின் கசிவு ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வேக, வேகமாக அலறியடித்தவாறு வெளியேறினர்.