×

இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் முதன்மை நோக்கம்: மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

நாசிக்: மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 288 தொகுதிகளை உடைய மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்  பாரதிய ஜனதா கட்சி தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளது. 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக., 122 இடங்களை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தை  தொடங்கிவைத்துப்பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் டின்டோரியில் நடந்த பேரணியில் பங்கேற்றேன். உங்கள்  ஆசிர்வாதங்களை தேடி பங்கேற்ற இந்த பேரணியில் பெரிய கூட்டத்தினர், பெரிய அதிர்வை ஏற்படுத்தினர். அந்த அதிர்வு, சக்தி வாய்ந்ததாக மாறி நாடு முழுவதும் பாஜக அலைவீச காரணமாக இருந்தது என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், 2வது முறையாக முதல்வர் ஆவார். அவர், இளைஞர்களின் அடையாளமாக திகழ்கிறார். கடந்த 5 வருடத்தில் மகாராஷ்டிரா மாநிலம், அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு பல  சலுகைகள் அளிக்கப்படுகிறது. முதல்வர், மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்கிறார். இதற்காக அவரை பாராட்டுகிறேன் என்றார். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த முறை இங்கு வந்தபோது வளர்ச்சியை அதிகப்படுத்துவேன் என கூறியிருந்தேன். அதை 100 நாட்களில் செய்து முடித்துள்ளேன். நாங்கள் அளித்த வாக்குறுதியை  சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்திலும் சொன்னபடி செயல்படுத்தினோம். காஷ்மீர் விவகாரத்தில் அரசு மட்டும் சேர்ந்து முடிவெடுக்கவில்லை. 130 கோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுத்தோம்.

இந்த முடிவு இந்தியாவின் ஒற்றுமைக்கானது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் கனவுகளையும் நிறைவேற்றும் முடிவாக இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் முதன்மை நோக்கம். வன்முறை, தீவிரவாதத்தை தூண்டும் முயற்சிகள்  நடந்து வந்தன. பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம் என குற்றம்சாட்டினார். தற்போது, அங்குள்ள இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் வன்முறையில் இருந்து  வெளிவந்து, புதிய முன்னேற்றத்திற்கான வேலை வாய்ப்புகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

50 கோடி கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து அளிக்கும் மத்திய அரசின் திட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது என்ற விமர்சனம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, கால் நடைகள் ஓட்டுப் போடுவதில்லை என்றார். கால்நடைகளின் வாய்  மற்றும் கால் சார்ந்த நோய்கள் மற்றும் கருச்சிதைவு நோய்க்கு எதிராக ஆடு, மாடுகள், எருதுகள், பன்றிகள் உள்ளிட்ட 50 கோடி கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து அளிக்க தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ்  திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : election campaign ,Modi ,Maharashtra ,India , Our primary aim is to protect India: PM Modi talks on the Maharashtra election campaign
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...