சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய பணபலன்களுக்கான காசோலைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார். போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுக்கான ஓய்வூதிய பலன்கள் கிடைக்காததை சுட்டிக்காட்டி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி கடந்த 2018 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2019 மார்ச் 31ம் தேதி வரை ஓய்வு பெற்ற 6,283 ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணபலன்களுக்கு 1,093 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் பணபலன்களை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது. அதில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கலந்துக்கொண்டு பணபலன்களுக்கான காசோலைகளை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கினார்.