×

சாலையில் மயங்கி விழுந்த முதியவரை தூக்கிச்சென்று அவரை ஆசுவாசப்படுத்திய கரூர் மாவட்ட ஆட்சியர்: குவியும் பாராட்டுக்கள்

கரூர்: கரூரில் நடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவரை தூக்கிச்சென்று அவரை ஆசுவாசப்படுத்திய மாவட்ட ஆட்சியரின் மனித நேயத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், குளித்தலை டோல்கேட் வழியாக திரும்பி கொண்டிருந்தார். அப்போது 70 வயது முதியவர் ஒருவர் சாலையின் நடுவே மயங்கி விழுந்ததை கண்ட ஆட்சியர், உடனடியாக வாகனத்தை நிறுத்தி போக்கவரத்து போலீசாரின் உதவியோடு அருகிலுள்ள டீக்கடைக்கு முதியவரை தூக்கி சென்றுள்ளார். அங்கு அவரை அமர வைத்து, அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.

பின்னர் 108 அவசர ஊர்தியை வரவழைத்து, அவரை குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து போக்குவரத்து காவலரின் செயலை பாராட்டிய ஆட்சியர், சம்பந்தப்பட்ட முதியவரின் குடும்ப நிலை குறித்து ஆய்வு செய்து தகவல் தெரிவிக்குமாறு குளித்தலை வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.  முதியவருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி இருக்கும் பட்சத்தில் அவருக்கு  ஆணை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவரின் மனித நேயமிக்க இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Tags : district collector ,Karur ,road , Mayangi, Elder, Karur, District Collector, congratulations
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்