திண்டுக்கல்லில் கல்லூரி உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். எம்.எம் நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது வடமதுரை பகுதியில் அக்னீ ஸ்கூல் ஆப் பிசினஸ் எக்சலென்ஸ் எனும் கல்லூரியை நடத்தி வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் கல்லூரி நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து நேற்றிரவு கன்னியப்பன் வேலைப்பளு காரணமாக கல்லூரியில் உள்ள ஓய்வறையிலேயே தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு எம்.எம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து காலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அக்கம்பக்கம் வீட்டார்கள், இது குறித்து கன்னியப்பனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படாததால் எம்.எம் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு திண்டுக்கல் மேற்கு நகர் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: