சென்னை: முகலிவாக்கம் சிறுவன் தீனா உயிரிழப்புக்கு மாநகராட்சி காரணம் அல்ல என்று கூறி, அமைச்சர் தங்கமணியின் கருத்துக்கு மாநகராட்சி ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, சென்னையில் மின்கம்பியை மிதித்து 14 வயது சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் தங்கமணி, 15ம் தேதி முகலிவாக்கத்தில் நடந்த விபத்து மின்சார வாரியத்தால் ஏற்பட்டது என்று செய்தி பரவி வருகிறது. அது மாநகராட்சியின் மின்கம்பம். அந்த கம்பியில் தான் பழுது ஏற்பட்டது. மழைக்காலம் வர இருப்பதால் மின்கம்பங்கள் பழுதடைந்தாலோ மின்கம்பிகள் தாழ்வாக இருந்தாலோ அதனை உடனடியாக சரி செய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை புதைவிட மின்கம்பிகள் அதிகமாக இருக்கின்றன. மின்சார வாரியத்திடம் உரிய அனுமதி பெறாமல் தோண்டும் போது தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன, என்று கூறினார். இந்த நிலையில், அமைச்சர் தங்கமணியின் கருத்துக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சிறுவனின் உயிரிழப்புக்கு மாநகராட்சி காரணமல்ல. எனினும் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் மாநகராட்சி அலவலர்கள் அல்லது ஊழியர்கள் தான் இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தனியார் கட்டடங்கள் மற்றும் வீடுகளில் வசிப்போர் தங்கள் கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து அறிய விரும்பினால், மாநகராட்சி உதவி செய்யும். மழைநீர் தேங்க கூடிய இடங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. முதலில் 1500 இடங்கள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 200 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. மழைநீரை அப்புறப்படுத்துவதற்கு 500 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 18 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன, அவை அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன, என்று தெரிவித்துள்ளார்.