அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பெருசு நகரில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் தெருக்களில் ஓடி சாக்கடையில் கலந்து வீணாகின்றது. பரமத்தி மரவாபாளயம் காவிரி ஆற்றிலிருந்து காவிரி நீர் அரவக்குறிச்சி வழியாக பள்ளபட்டி பேரூராட்சி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியத்திலுள்ள பல ஊராட்சிகளுக்கு பூமிக்கடியில் பெரிய குழாய் மூலம் கொண்டு சென்று வினியோகிக்கப்படுகின்றது. இந்நிலையில் போலீஸ் நிலையத்திலிருந்து எட்டியாக்கவுண்டனூர் செல்லும் சாலையில் பெருசு நகர் பிரிவு அருகே சாலையோரம் காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதிலிருந்து கடந்த ஒரு மாதமாக ஏராளமாக குடிநீர் வெளியேறி பெருசு நகர் தெருக்களில் குளம் போல் தேங்குகின்றது.