காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை திருச்சியில் உள்ள மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

விழுப்புரம்: காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை திருச்சியில் உள்ள மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் என்பவர், குறும்பரம் கிராமத்தில் வனத்துறை அனுமதியின்றி யானைகள் முகாம் நடத்தப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த, சந்தியா, ஜெயந்தி, இந்துமதி என்கிற மூன்று யானைகளை, பவுண்டேஷன் இந்தியா மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு அறக்கட்டளை அமைப்புகள், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளன. இந்த யானைகள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தாலுகா, குரும்பரம் என்ற இடத்தில் உள்ள காப்பகத்தில் உள்ளன. ஆனால், இந்த காப்பகத்தில், உரிய வசதிகள் இல்லை.

அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்படும், யானைகள் காப்பகத்தை மூட வேண்டும். யானைகளை மீட்டு, முகாம்களில் பராமரிக்க உத்தரவிட வேண்டும், என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஷேசாயி அடங்கிய முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த 3 பெண் யானைகளையும் நான்கு வாரங்களுக்குள் மீட்டு திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த மையத்தில் யானைகளுக்கு உரிய மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், யானைகள் இடமாற்றம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

Related Stories: