×

இடிந்து விழும் அபாயம்: புலவன்பட்டி - அம்பலவாணபுரம் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

வி.கே.புரம்: புலவன்பட்டியில் இருந்து அம்பலவாணபுரத்தை இணைக்கும் பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வி.கே.புரம் அருகே உள்ள சிவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்டது புலவன்பட்டி. இக்கிராமத்தில் சுமார் 1500 பேர் வசிக்கின்றனர். இவர்கள் வெளியூர் செல்வதற்கும், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கும் இங்குள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த பாலம்தான் புலவன்பட்டியில் இருந்து அம்பலவாணபுரத்தை இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது.

இந்த பாலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். கைப்பிடி சுவர் கிடையாது. தற்போது இடிந்து விழும் நிலையில் பாலம் காட்சியளிக்கிறது. இந்த பாலத்தின் வழியாகத்தான் விவசாய நிலங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் உரங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர். எந்த நேரத்திலும் இந்த பாலம் இடிந்து பெரும் ஆபத்தை உருவாக்கும் நிலையில் உள்ளது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் பாலத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Bridge , Bridge, pulavanpatti
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!