அமெரிக்காவுடன் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமினி திட்டவட்டம்

ஈரான்: இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமினி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சவதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான் தான் தாக்குதல் நடத்தியது எனக்கூறி அதற்கு ஆதாரமாக செயற்கைகோள் படம் ஒன்றையும் அமெரிக்கா வெளியிட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார். எனினும், அமெரிக்கா தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறிய ஈரான், இது போன்ற குற்றச்சாட்டுகள் மீண்டும் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி காமினி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தொலைக்காட்சியில் பேசிய அவர், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்த திட்டமும் ஈரானிடம் இல்லை என்றார். இதை தொடர்ந்து சவதி அரேபிய எண்ணெய் ஆலை தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிடுவதாக கூறிய அவர் அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு ஈரான் ஒருபோதும் பலியாகாது என்றார். இதையடுத்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்றும், இனி அவர்களுடன் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை இல்லை என்றும் ஈரான் தலைவர் காமினி தெரிவித்தார்.

Related Stories: